Wednesday, March 24, 2010

செசன்யா - என்ன தான் பிரச்சனை?




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

செசன்யா....இப்போது என்ன தான் வேண்டும் இந்த பகுதி மக்களுக்கு? 

நான்கே வார்த்தைகளில் சொல்லுவதென்றால்...

"நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு"

இதுதான் இப்போது செசன்யா மக்களுக்கு தேவை. பார்ப்பதற்கு எளிமையாய் தோன்றும் இந்த நான்கு வார்த்தைகளில் தான் விஷயமே இருக்கிறது. 

பெரும்பாலான செசன்ய மக்களை பொறுத்தவரை இந்த நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது செசன்யா சுதந்திர நாடாவதால் மட்டுமே சாத்தியம். 

ரஷ்ய கூட்டரசின் (அல்லது சம்மேளனத்தின்  (Russian Federation) ) முடிவோ, அவர்களது மண்ணில் இருந்து ஒரு பகுதி பிரிவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது என்பது....

இங்குதான் விவகாரமே, ரஷ்ய கூட்டரசு என்னதான் செசன்யா தங்களது பகுதி என்று சொன்னாலும், செசன்ய மக்களை பொறுத்தவரை அவர்கள் என்றுமே தங்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக நினைத்ததில்லை/விரும்பியதில்லை, மேலும் செசன்யா ரஷ்யாவின் நிலப்பகுதியும் இல்லை. செசன்னியர்களை பொறுத்தவரை, ரஷ்யா தன் இராணுவ பலத்தால் அவர்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறது, அவ்வளவுதான். இன்னும் சொல்லப் போனால் 1990-ஆம் ஆண்டு, தாங்கள் ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்து கொண்டவர்கள் அவர்கள். பிறகு ரஷ்ய கூட்டரசிற்கும், செசன்யாவிற்கும் இடையே இரு யுத்தங்கள், இவற்றின் மூலம் மறுபடியும் செசன்யா, ரஷ்ய கூட்டரசின் கீழ்.          

செசன்ய பிரச்சனை இன்று நேற்று வந்ததல்ல, அது சுமார் முன்னூறு ஆண்டுகால பிரச்சனை. 

என்று ரஷ்யாவின் ஜார் (Czar) ஆட்சியாளர்களின் படைகள் செசன்னியர்களின் நிலங்களை ஆக்கிரமைக்க துவங்கினவோ (late 18th century) அன்று ஆரம்பித்த பிரச்சனை. இன்று வரை பல ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள், ஆனால் செசன்னியர்களுக்கு அவர்கள் நிலப்பகுதி மட்டும் திரும்ப கிடைக்கவில்லை. அன்றிலிருந்து இன்று வரை லட்சக்கணக்கான மக்களை இந்த விடுதலை போராட்டத்திற்கு அவர்கள் பறிகொடுத்து விட்டனர்.

செசன்ய விவகாரங்களை முழுமையாக இங்கு பார்க்க முடியாது என்றாலும், முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

அதற்கு முன், இன்றைய ரஷ்யாவைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வது இந்த பதிவிற்கு அவசியம் என்று நினைக்கிறேன்.            

முதலில், ரஷ்யா என்று அழைப்பதை விட ரஷ்ய கூட்டரசு அல்லது சம்மேளனம் (Russian Federation) என்று அழைப்பதே அரசியல்ரீதியாக சரியாக இருக்கும். எழுதுவதற்கு எளிமையாக இருக்கும் என்பதற்காக இந்த பதிவு முழுவதும் ரஷ்யா என்றே பயன்படுத்தப்படுகிறது. 

ரஷ்யா என்பது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு, ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து ஆசியாவின் கிழக்கு வரை பரந்து விரிந்த பகுதி. ரஷ்யாவின் அரசியல் சாசனத்தின்படி, ரஷ்யா, 83 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது (83 federal Subjects or members of Federation). இதுவே முன்பு 89 ஆக இருந்தது,  பின்னர் சில பகுதிகளை ஒன்று சேர்த்து 83 ஆனது. நம் நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்   இருக்கிறதல்லவா, அதுபோல..

அவற்றில் குடியரசுகள் (Republics) மட்டும் 21. ரஷ்ய சம்மேளனம் உருவான போது, ரஷ்யாவில் இருந்த வெவ்வேறு இனத்தவருக்கு (உதாரணத்திற்கு செசன்னியர்கள்)   அவர்கள் சார்ந்த இனம், மொழி வாரியாக குடியரசுகள் உருவாக்கப்பட்டன. மொழி வாரியாக நம் மாநிலங்கள் பிரிக்கப்பட்டனவே அது போன்று.  

இந்த குடியரசுகள் சுதந்திர நாடுகள் கிடையாது. இவை ரஷ்யாவின் கட்டுபாட்டுக்குள்லேயே  இருக்கும், ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே அறியப்படும், ஆனால் கூட்டரசின் மற்ற பகுதிகளை விட இவற்றுக்கு அதிகாரம் அதிகம்.

  • இந்த குடியரசுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு (Autonomous)
  • ஒவ்வொரு குடியரசும் தங்களுடைய அரசியல் சாசனத்தை (Constitution) உருவாக்கி கொள்ளலாம். 
  • பாராளுமன்றம், அதிபர் என்று ஒரு நாட்டிற்கு இருக்கக்கூடிய எல்லாம் உண்டு.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்களுடைய உள்விவகாரங்களை (Internal Affairs) எல்லாம் இவர்களே பார்த்துக்கொள்ளலாம், ஆனால் வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரங்கள் (External Affairs and Military) எல்லாம் ரஷ்யாவிடம் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த குடியரசுகளின் அதிபரை, ரஷ்ய அதிபர் தான் தேர்ந்தெடுப்பார்.

என்ன தான் தன்னாட்சி அதிகாரம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் நிச்சயமாக அது இல்லை. புடின் அவர்கள் ரஷ்யாவின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு குடியரசுகளின் அதிகாரங்களை பெருமளவு குறைத்து விட்டார். 

இங்கு ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சோவியத் யூனியனில் (USSR) இருந்து பிரிந்து சென்ற 14 நாடுகளும் (1991), சோவியத் யூனியனின் குடியரசுகளாக இருந்தவைதான். இதுதான் இன்றைய ரஷ்யாவின் மற்றுமொரு அச்சம். தற்போது ரஷ்ய கூட்டரசின் பகுதிகளாக உள்ள குடியரசுகளும் சுதந்திரம் கேட்க ஆரம்பித்து விட்டால் ரஷ்யாவின் நிலை? கேட்க ஆரம்பித்துவிட்டாலா, ஏற்கனவே சுதந்திர கோஷம் துவங்கிவிட்டது. செசன்யாவில் தான் இது மிக அதிகம் என்றாலும் மற்ற சில குடியரசுகளிலும் (குறிப்பாக செசன்யாவை சுற்றியுள்ள குடியரசுகளான இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan)) ஆங்காங்கே கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

ரஷ்யாவின் நிலையிலிருந்து பார்த்தோமானால் அவர்களாலும் இந்த சில குடியரசுகளுக்கு தற்போதைய நிலையில் சுதந்திரம் கொடுக்க முடியாது. ஏனென்றால், சோவியத் யூனியன் கலைந்த பிறகு பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து விட்டது. பசி, பஞ்சம் என்று பிரச்சனைகள் தலை விரித்தாடியது. இன்று ரஷ்யா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது, அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று,  செசன்யா மற்றும் அதனை சுற்றியுள்ள குடியரசுகளின் இயற்கை வளங்கள் (முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்).

அதுமட்டுமல்லாமல் இந்த குடியரசுகளின் பக்கத்தில் உள்ள காஸ்பியன் கடலில் (Caspian Sea) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம். இந்த எண்ணெய்யை மேற்கே உள்ள நாடுகளுக்கு கொண்டுச்செல்ல, செசன்யா மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியரசுகளின் வழியாக பைப்லைன் (குழாய்கள்) போடுவதுதான் சிறந்த வழி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆக, ரஷ்யா, இந்த குடியரசுகளுக்கோ அல்லது இதில் ஏதோ ஒரு குடியரசுக்கோ சுதந்திரம் வழங்கிவிட்டால், வளர்ந்து வரும் தன் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நினைக்கிறது. 

இந்த ஒரு முக்கிய காரணம் தான் செசன்யாவிற்கு சுதந்திரம் அளிப்பதை தடுக்கிறது. என்ன விலை கொடுத்தாவது செசன்யாவை தன்னிடத்தில் வைத்திருக்கவே ரஷ்யா விரும்புகிறது.

இங்கே சற்று நிறுத்தி செசன்யாவின் வரலாற்றை பார்த்து விடுவோம்.

செசன்யாவின் வரலாற்றை பார்க்கும்பொழுது அது பூகோள ரீதியாக அமைந்திருக்க கூடிய பகுதியையும் பார்த்து விட வேண்டும். செசன்யா, ஐரோப்பிய கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.



செசன்யா அமைந்திருக்ககூடிய நிலப்பகுதி காகசஸ் (Caucasus Region) என்று அழைக்கப்படுகிறது, இந்த காகசஸ் பகுதியின் வடக்கில் தான் செசன்யா இருக்கிறது. அதன் பக்கத்தில் ரஷ்ய சம்மேளனத்தின் மற்ற குடியரசுகளும் (Republics), நிலப்பகுதிகளும் (Territory) இருக்கின்றன.



தென் காகசஸ் (South Caucasus) பகுதியில் ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளான ஜார்ஜியா (Georgia), அர்மேனியா (Armenia) மற்றும் அசர்பைஜன் (Azerbaijan) போன்ற நாடுகள் இருக்கின்றன.

இந்த பகுதிக்கு காகசஸ் என்று பெயர் வரக்காரணம் இங்குள்ள காகசஸ் மலை தொடர்களால் (Caucasas Mountains) தான். இந்த காகசஸ் மலைத்தொடர், கிழக்கே காஸ்பியன் கடலில் (Caspian sea) இருந்து மேற்கே கருங்கடல் (Black Sea) வரை நீண்டுள்ளது.



ஆக, காகசஸ் பகுதியின் வடக்கே செசன்யா உள்ளிட்ட ரஷ்யாவின் பகுதிகளும், தெற்கே ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளும் இருக்கின்றன.

இங்கு, இந்த வட காகசஸ் பகுதியில் உள்ள மற்ற இரு முக்கிய ரஷ்ய குடியரசுகள் இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan) ஆகும். ஏன் இவற்றிற்கு முக்கியத்துவம்? ஏனென்றால் இந்த பகுதிகள் இல்லாமல் செசன்யாவின்  வரலாற்றை பார்க்கமுடியாது.

இப்போது செசன்யாவின் வரலாற்றை பார்ப்போம்.                    

ரஷ்யர்களுடனான செசன்யர்களின் மோதல் என்பது ஆரம்பித்தது 1785 - 1791ல். அப்போது ரஷ்யா தன் நிலப்பகுதிகளை விரிவுப்படுத்த ஆரம்பிக்க, அதன் ஒரு பகுதியாக காகசஸ்சை ஆக்கிரமைக்க தொடங்கியது. ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சுலபத்தில் முடிந்துவிடவில்லை. ரஷ்ய படைகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வந்தது. ஏனென்றால் அந்த பகுதியில் இருந்த மக்களின் போர்த்திறமை அப்படி. கொரில்லா யுத்த முறைகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள். இன்று வரை மலைப்பகுதியில் செசன்யர்களை தோற்கடிப்பது என்பது ரஷ்ய படைகளுக்கு முடியாத காரியமாகவே இருக்கிறது.

அப்போது ரஷ்யர்களை எதிர்க்க படைகளை திரட்டி போராடியதில் முக்கிய பங்கு ஷேக் மன்சூர் (Sheikh Mansur Ushurma) அவர்களுக்கு உண்டு. ரஷ்ய படையினருக்கு சரியான சவாலாக விளங்கின இவரது படைகள்.

பிறகு 1834 முதல் 1859 வரை, ஷேக் மன்சூர் விட்டுச்சென்ற பணியை இமாம் ஷமீல் (Imam Shameel) தொடர்ந்தார். கடுமையான யுத்தத்திற்கு பிறகு 1859 ல், ரஷ்ய படை காகசஸ் பகுதியை முழுமையாக ஆக்கிரமைத்தது. ரஷ்ய ஆட்சி தொடங்கியது.      

ஆக, இவர்களுடைய நிலப்பகுதிகளை முதலில் ஆக்கிரமைத்தது ரஷ்யர்கள்தான். 

அன்று போராட ஆரம்பித்தவர்கள் தான் இன்றளவும் தங்கள் நிலத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  

பிறகு, 1917 ஆம் ஆண்டு, ரஷ்ய புரட்சிக்கு பிறகு தங்களை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டார்கள் செசன்னியர்கள். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ரஷ்ய படைகள் மறுபடியும் (இந்த முறை கம்யுனிச படைகள்) ஆக்கிரமித்து, 1923-இல் செசன்யாவையும் இங்குஷேடியாவையும் சேர்த்து செசன்ய-இங்குஷேடிய தன்னாட்சி பகுதி (Chechen-Ingush Autonomous Region) உருவாக்கப்பட்டது. பிறகு இதுவே 1930-இல், செசன்ய-இங்குஷேடிய தன்னாட்சி குடியரசு (Chechen-Ingush Autonomous Republic) என்று மாறியது.    

1944-ஆம் ஆண்டு, தங்கள் விடுதலைக்காக, ஹிட்லரின் நாஜி படைகளுக்கு செசன்யர்கள் உதவுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அதற்கு தண்டனை என்று, செசன்ய மக்களை கஜகஸ்தானுக்கும், சைபீரியாவிற்கும் நாடு கடத்த உத்தரவிட்டார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், ஹிட்லரின் நாஜி படைகள் செசன்யாவின் எல்லை வரைக்கூட வரவில்லை. அப்படி அவர்கள் வந்திருந்தால், இரண்டாம் உலகப்போர் சீக்கிரத்தில் முடிந்திருக்காது. ஏனென்றால் ஹிட்லரின் நாஜி படைகள் தோல்வியை தழுவியதற்கு மிக முக்கிய காரணம், அவரது துருப்புகளுக்கு தேவையான எண்ணெய் கிடைக்காததே. ஒருவேளை ஹிட்லரின் படைகள் செசன்யாவிற்குள் வந்திருக்குமானால் அவர்களுக்கு தேவையான எண்ணெய் வளத்தை பெற்றிருப்பார்கள், போரும் விரைவில் முடிவுக்கு வந்திருக்காது.

ஆக, ஸ்டாலினின் குற்றச்சாட்டில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். சுமார் 4-8 லட்சம் மக்கள் நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர், மிக மோசமான வானிலை காரணமாக போகும் வழியிலேயே உயிரிழந்தனர்.

செசன்ய-இங்குஷேடிய குடியரசு கலைக்கப்பட்டது, ரஷ்ய வரைப்படத்திலிருந்தும் நீட்கப்பட்டது. இந்த சம்பவம் இன்றளவும் செசன்ய மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு பிறகு, 1957 ஆண்டு, குருஷேவ் (Khushchev) ஆட்சிகாலத்தில் நாடு கடத்தப்பட்ட செசன்னியர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். மறுபடியும் செசன்ய-இங்குஷேடிய குடியரசு நிறுவப்பட்டது. 

பிறகு 30 ஆண்டுகள் அமைதி. 1989 இல், பெர்லின் சுவர் இடிக்கப்பட, சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடைய துவங்கிய நேரம். நவம்பர் 1990-இல், செசன்யா தன் விடுதலையை அறிவித்தது. அதாவது சோவியத் யூனியனின் அரசியல் சாசன விதி 72-இன் படி (Soviet Constitution Article 72), விடுதலை கோரக்கூடிய குடியரசுகளுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும். அதுபடி தங்களை சுதந்திர நாடாக அறிவித்துகொண்டார்கள்.    

Dec 31,1991-இல் சோவியத் யூனியன் முற்றிலுமாக வீழ்ச்சியடைய, சோவியத் யூனியனின்  14 குடியரசுகள் தங்கள் விடுதலையை அறிவித்தன. பிறகு ரஷ்ய சம்மேளனம் உருவாக்கப்பட்டது. Mar 31, 1992-இல் தற்போதைய ரஷ்யாவின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. அதிபராக போரிஸ் எல்சின் (Boris Yeltsin) பொறுப்பேற்றார். இங்குஷேடியா, ரஷ்யாவின் ஒரு குடியரசாக சேர, செசன்யா தன் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தியது. ஜெனரல் ஜோகர் டுடதேவ் (General Dzhokhar Dudayev) சுதந்திர செசன்யாவின் அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.

எல்சின், செசன்யாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.

சோவியத் யூனியனின் மற்ற குடியரசுகள் சுதந்திர தேசங்களாக மாற, தங்களை ஏன் ரஷ்யா அங்கீகரிக்க மறுக்க வேண்டும் என்பது செசன்யாவின் கேள்வி. அதற்கு எல்சின், சோவியத் யூனியனின் மற்ற குடியரசுகளை போல அல்ல செசன்யா என்று சொல்லிவிட்டார்.

ஆனால் உண்மையான காரணமோ செசன்யாவின் இயற்கை வளங்களை ரஷ்யா இழக்க விரும்பவில்லை என்பதே ஆகும். பொருளாதாரரீதியாக துவண்டு கிடக்கும் ரஷ்யாவை செசன்யாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் காப்பாற்றும் என்ற நம்பிக்கைதான் அது.

அது பற்றியெல்லாம் செசன்யாவின் புது அரசாங்கம் கவலைப்படவில்லை. தாங்கள் இப்போது சுதந்திர தேசம் என்று பெருமைப்பட்டு கொண்டார்கள். எல்சினோ  மறுபடியும் செசன்யாவை பிடிக்க படைகளை அனுப்ப, செசன்யர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது ரஷ்யப்  படை.

மறுபடியும் 1994-இல், எல்சின் தன் படைகளை அனுப்பினார். பெரும் யுத்தம். இது வரலாற்றில் முதல் செசன்ய யுத்தம் (1994-1996) என்றழைக்கப்படுகிறது. இந்த யுத்தம் தான் செசன்னியர்களின் போர்த்திறனை உலகிற்கு அடையாளம் காட்டியது. ரஷ்ய படைகள் மிரண்டுபோயின. நாம் மேலே பார்த்தபடி செசன்னியர்களை காகசஸ் மலைப்பகுத்தில் சந்திப்பதென்பது இன்று வரை ரஷ்ய படைகளால் முடியாத காரியம், ஆனால் நிலப்பகுதியிலும் அவர்கள் வல்லவர்கள் என்பதை நிரூபித்தது இந்த முதல் செசன்ய போர்தான்.

அதுமட்டுமல்லாமல், செசன்னியர்கள் சகோதரத்துவத்திற்கு பேர் போனவர்கள், அவர்களின் ஒற்றுமையை பறைச்சாற்றியதும் இந்த போர்தான். ஆக, முதல் செசன்ய யுத்தத்தில் ரஷ்ய படைகளுக்கு அதிர்ச்சி தோல்வி. இந்த போரில் செசன்ய அதிபர் டுடதேவ் 1995-இல் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்டாலும், அஸ்லன் மாஸ்கடோவ் (Aslan Maskhadov) தலைமை தாங்கி நடத்தினார்.

1996-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. சுமார் 40,000-80,000 பேர் பலியான கொடுமையான யுத்தம். செசன்ய நகரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மக்கள் வீடுகளை இழந்தார்கள்.




ரஷ்ய அதிபர் எல்சினுக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செசன்ய அதிபர் மாஸ்கடோவ்விற்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து ஆண்டுகள் அமைதி காக்க வேண்டும் என்றும், பின்பு செசன்ய விடுதலை பரிசீலிக்கப்படும் என்பதும், இந்த ஐந்து ஆண்டு காலங்களில், ரஷ்யா, முற்றிலும் சேதமடைந்த செசன்ய நகரங்களை சீரமைக்க உதவும் என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சங்கள்.

1999-இல், அதிபர் அஸ்லன், செசன்யாவில் இஸ்லாமிய ஷரியத் படி அரசாங்கம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு செயல்படும் என்று அறிவித்தார்.

ஆனால் பிரச்சனை முடியவில்லை, 1999-ஆம் ஆண்டு, ரஷ்யா மறுபடியும் பெரும் படைகளை செசன்யாவிற்கு அனுப்பியது. இரண்டாவது செசன்ய யுத்தம் ஆரம்பம். படைகளை அனுப்பியதற்கு ரஷ்யா சொன்ன முக்கிய காரணங்கள் இரண்டு.

1. முதல் காரணம், பக்கத்தில் உள்ள டகெஸ்டானில் (Dagestan) உள்ள பிரிவினைவாதிகளுக்கு செசன்ய அரசாங்கம் உதவி புரிவதாக குற்றஞ்சாட்டியது, இதை செசன்ய அரசு மறுத்தது.

ஆனால் செசன்யாவில் இருந்து சில செசன்னியர்கள் டகெஸ்டானிற்கு சென்று அங்கு போராடி வந்தவர்களுக்கு உதவி செய்தனர் என்பது உண்மை.

ஆனால் இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். வட காகசஸ் பகுதியில் உள்ள செசன்யா, இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan) ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள் காலங்காலமாக ஒன்றாக இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டவர்கள்/கொள்பவர்கள். நாம் முன்னே பார்த்த இமாம் ஷமில், டகெஸ்டானை சேர்ந்தவர் தான்.  

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு பொருத்தமில்லாதது. ஏனென்றால், 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி, செசன்யாவின் எல்லையை ஒட்டிய, டகெஸ்டானில் இருந்த இரண்டு கிராமங்களை, போராட்டகாரர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, குண்டு வைத்து தகர்த்தது ரஷ்யா. அதில் பல மக்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தான், டகெஸ்டானில் உள்ள போராட்டகாரர்களுக்கு உதவி செய்யப்போனோம் என்பது அங்கு சென்ற செசன்னியர்களின் வாதம். அவர்கள் காலங்காலமாக இப்படி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டுதான் இருக்கின்றனர். இது ரஷ்யாவிற்கும் தெரியாததல்ல.    

ஆனால், இதில் அரசாங்கத்திற்கு பங்கில்லை என்பது செசன்ய அரசின் வாதம்.

2. இரண்டாவது காரணம், அந்த ஆண்டு மாஸ்கோவில் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்புகளுக்கு செசன்னியர்கள் தான் காரணம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

1994-1996 ஆண்டுகளில் நடந்த முதல் செசன்ய போரின்போதே அப்படிப்பட்ட எதையும் செய்யாதவர்கள் அவர்கள். இப்போது அமைதி காலத்தில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? செசன்னியர்கள் இதை முற்றிலுமாக மறுத்தார்கள். இது ரஷ்ய உளவுத்துறையின் செயல் என்று குற்றஞ்சாட்டினர். ரஷ்யாவும் செசன்னியர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.    

அதுமட்டுமல்லாமல், Economist அக்டோபர் 1999 இதழில், ரஷ்ய உளவாளிகள் ஒரு கட்டிடத்தில் குண்டு வைத்த போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டதாக செய்தி வெளியானது.

ஆக, ரஷ்யா 1999-ஆம் ஆண்டு செசன்யாவின் மீது போர்த்தொடுக்க முக்கிய காரணங்கள் இதுதான்.
 
ஆனால் விளக்கங்களை ஏற்க மறுத்த ரஷ்ய அரசு, இந்த முறை மாபெரும் படையை அனுப்பியது. மறுபடியும் மோசமான யுத்தம், செசன்ய படைகள் மலைப்பகுதிகளுக்கு துரத்தப்பட, செசன்ய நகரங்கள் அழிக்கப்பட்டன. நிறைய மக்கள் கொல்லப்பட, மூன்றில் ஒரு பங்கு மக்கள் அகதிகளாக வெளியேறினர். ஐ.நா சபை செசன்யாவில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நடப்பதாக 2000-ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீது குற்றஞ்சாட்டியது.                                          



அப்போது விளாடிமிர் புடின் (Vladimir Putin) ரஷ்யாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருந்தார். புடினுடைய செசன்ய கொள்கைகளும் அவருக்கு முன் சென்றவர்களின் கொள்கையைப் போன்றே இருக்க, செசன்ய விடுதலை என்பது கேள்விக்குறியானது.

2002-ஆம் ஆண்டு, செசன்யர்கள் சிலர், மாஸ்கோவில் உள்ள ஒரு தியேட்டரில் புகுந்து சுமார் 763 பேரை பணயக் கைதிகளாக பிடித்தனர். செசன்யாவில் போரை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க, ரஷ்ய அரசாங்கம் அதனை ஏற்க மறுத்தது. பிறகு ரஷ்ய ராணுவம் விஷப்புகையை தியேட்டருக்குள் செலுத்தி அவர்களை கொன்றது. இதில் மக்கள் சுமார் நூறு பேரும் கொல்லப்பட்டனர்.   

2003-ஆம் ஆண்டு செசன்ய குடியரசுக்கான புதிய அரசியலமைப்பு கொள்கைகள் ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்டன. இதற்கு செசன்ய மக்களின் ஆதரவு இல்லை. பிறகு, ரஷ்யாவின் பல பகுதிகளில் 2003-2004 ஆண்டு வாக்கில் பல குண்டுவெடிப்புகள் நிகழ்த்த பட்டன. அவை ரஷ்யாவை நிலை குலையச்செய்தன.

அவற்றில் மிக முக்கியமானது மற்றும் சோகமானது, செப்டம்பர் 1-3 தேதிகளில், 2004-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம். இந்த காலகட்டத்தில், சுமார் 32 கொரில்லாக்கள் (செசன்னியர்கள், இங்குஷேடியர்கள் மற்றும் ரஷ்யர்கள் இவர்களில் அடங்குவர்) செசன்யாவிற்கு பக்கத்தில் உள்ள பெஸ்லான் (Beslan) என்ற இடத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தனர் (on Sep 1st, 2004). பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று சுமார் 1100 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். இப்போதும் போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.

மூன்றாம் நாள்  (on Sep 3rd, 2004) ரஷ்ய படைகள் பள்ளியை நோக்கி தாக்க ஆரம்பித்தன. பிறகு ரஷ்ய படைகளுக்கும், கொரில்லாகளுக்கும் நடந்த சண்டையில் சுமார் 335 பேர் கொல்லப்பட்டனர், அதில் 156 பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். இது ஒரு மிக வேதனையான சம்பவம். ஏற்றுக்கொள்ளபடக்கூடாததும் கூட...      

ஆனால் ரஷ்யா தன் முடிவில் உறுதியாய் நின்றது, தனக்கு ஆதரவான அரசாங்கத்தை செசன்யாவில் நிறுவியது. அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்யா அமைத்துள்ள பொம்மை அரசாங்கம் (Puppet Government) தான் செசன்யாவில் நடந்து வருகிறது.

2009 ஆம் ஆண்டு (April 2009) ரஷ்யா தன் படைகளை செசன்யாவிலிருந்து திரும்பப்பெற்றது. போராட்டகாரர்களும் சென்ற ஆண்டிலிருந்து (August 2009) சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.      

ஆக, செசன்யாவின் பிரச்சனை என்பது, நாம் மேலே பார்த்த படி, ஜார் மன்னர்களாகட்டும், ரஷ்ய புரட்சியின் போது ஏற்பட்ட அரசாகட்டும், ஸ்டாலினாகட்டும், எல்சினாகட்டும், புடினாகட்டும், (தற்போதைய அதிபர்) மெட்வடேவாகட்டும், இவர்கள் அனைவரது செசன்ய கொள்கைகளும் ஒரே போன்று இருந்ததுதான்.

செசன்யா தங்களால் ஆக்கிரமைக்க பட்ட பகுதி என்பதை கண்டும் காணாமல் இருப்பதுதான் அபத்தம். எப்படி ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளை விட்டுக்கொடுக்க தயங்கினவோ அதைத்தான் ரஷ்யாவும் செய்கிறது. செசன்யா என்ற தன் காலனியை அது விட்டுத்தர விரும்பவில்லை.  

அப்படி அவர்கள் விட்டு தந்திருந்தால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். எப்படி உலகம் ஹிட்லரை பார்த்ததோ, அப்படித்தான் செசன்ய மக்கள் ரஷ்ய அரசாங்கத்தை பார்க்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஐந்தில் ஒரு செசன்யர் உயிரிழந்திருக்கிறார். எண்ணற்றவர்கள் அகதிகளாய் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ரஷ்யாவின் மீது கடுமையான வெறுப்பு உருவாகியிருக்கிறது.

ஆக,

1. ரஷ்யா, செசன்யாவை தன்னுள் வைத்திருக்க முழு முதற்காரணம் அந்த பகுதியின் இயற்கை வளம் மற்றும் காஸ்பியன் கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம். செசன்யா சுதந்திரம் அடைந்து விட்டால் அது ரஷ்யாவிற்கு தர்ம சங்கடமான நிலையைத் தரும்.

2. இரண்டாவது, செசன்ய விடுதலை, விடுதலை கேட்கக்கூடிய மற்ற குடியரசுகளை தூண்டிவிட்டதாய் அமையும்.                     

3. மூன்றாவது, இஸ்லாமிய ஆட்சி அமைந்து விடும் என்ற அச்சம். இது ரஷ்யாவை பொறுத்தவரை ஒரு ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால், என்னதான் ரஷ்யாவிற்கும் செசன்னியர்களுக்கும் சில நூற்றாண்டுகளாக சண்டை நடந்து வந்தாலும், 2001-ஆம் ஆண்டுக்கு முன்வரை, அதை, ரஷ்யா மதச்சாயம் பூசி பார்த்ததில்லை.

அங்கு முஸ்லிம்கள் இல்லாமல் வேறு மதத்தினர் இருந்து, அவர்கள் ரஷ்யாவிடமிருந்து விடுதலை கேட்டிருந்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். ரஷ்யர்களை பொறுத்தவரை அவர்கள் செசன்யர்கள், அவ்வளவுதான்.

அப்படியே அவர்களை போராளிகள் என்று சொல்லாவிட்டாலும், செசன்ய தீவிரவாதிகள் என்றுதான் அழைப்பர், இஸ்லாமிய/முஸ்லிம் தீவிரவாதிகள் என்று மதச்சாயம் பூசியதில்லை.

ஒருவேளை செசன்யா சுதந்திரம் அடைந்தால், நிச்சயம் அங்கு இஸ்லாமிய ஷரியத்படி தான் ஆட்சி அமையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். காலங்காலமாக செசன்னியர்கள் விரும்பியதும், செயல்படுத்தியதும் அதைத்தான். இஸ்லாம் என்பது அவர்களின் வாழ்வில் ஒன்றிணைந்தது. இஸ்லாத்தை பிரித்து செசன்னியர்களின் வாழ்வை பார்க்க முடியாது.

இதெல்லாம் ரஷ்யாவிற்கும் தெரியாமல் இல்லை. அவர்கள் என்ன இன்று நேற்றா இவர்களுடன் சண்டையிடுகிறார்கள்?, ரஷ்யாவிற்கு இஸ்லாமிய ஆட்சியெல்லாம் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. அதுமட்டுமல்லாமல் ரஷ்யர்களில் முஸ்லிம்களும் அதிகம் (There are good number of Ethnic Russian Muslims).

இப்போது இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தீவிரவாதம் என்று அவர்கள் வார்த்தைகளை உபயோகப்படுத்துவதெல்லாம், உலக நாடுகளை செசன்ய பிரச்சனையிலிருந்து விலக்கி வைக்கத்தான். நாங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து தான் போராடுகிறோம் என்று அறிவித்துவிட்டால் யார் செசன்யாவிற்கு ஆதரவு அளிப்பார்கள்? அதுதான் அவர்கள் இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது போன்ற வார்த்தைகளை போடுவதற்கு காரணம்.

இந்த தந்திரம் இப்போது நன்றாகவே வேலை செய்கிறது, 2001-ஆம் ஆண்டுக்கு முன் ரஷ்யாவை கண்டித்த நாடுகளெல்லாம் இப்போது வாய் மூடி இருக்கின்றன, ஏனென்றால் ரஷ்யா இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்தல்லவா போராடுகிறது?

உலக நாடுகள் வாய்மூடி இருந்தாலும் மனித உரிமை அமைப்புகள் ரஷ்யாவின் அத்துமீறலை கண்டித்து தான் வருகின்றன.

சரி, ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு செசன்னியர்கள் என்ன சொல்கின்றனர்?

1. ரஷ்யா தங்கள் மீது சுமத்தும் பெரும்பாலான தீவிரவாத செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் பொய். அந்த குண்டுவெடிப்புகள் எல்லாம் ரஷ்ய உளவுத்துறையே நடத்தி தங்கள் மீதான போரை நியாயப்படுத்திவருகின்றது என்பது. அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் இது உண்மைதான். ஏனென்றால் நிறைய குற்றச்சாட்டுகள் ரஷ்யாவினால் நிரூபிக்கப்படவில்லை.   

2. செசன்யா சுதந்திர நாடாகி இஸ்லாமிய ஷரியத்படி ஆட்சியமைந்தால், செசன்யாவில் மத பேதம் பார்க்காமல் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படுவார்கள் என்பது இரண்டாவது.

செசன்ய மக்கட்தொகையில் கணிசமான அளவில் கிருத்துவர்களும் (8-10%), யூதர்களும் உள்ளனர்.

1944-ஆம் ஆண்டு ஸ்டாலினால் நாடு கடத்தப்பட்டபோது, இவர்களுடைய வீடுகளை பாதுகாத்து, இவர்கள் 1957-ஆம் ஆண்டு நாடு திரும்பியவுடன், இவர்களிடம் ஒப்படைத்தவர்கள் செசன்ய யூதர்கள். இன்றளவும் அந்த நிகழ்ச்சி செசன்னியர்களின் மனதில் பசுமையாக இருக்கிறது, தங்களின் அடுத்த தலைமுறைக்கும் மறக்காமல் இந்த நிகழ்ச்சியை சொல்லிக்கொடுக்கின்றனர்.

அதுபோல முதல் செசன்ய யுத்தத்தில் இவர்களுக்கு பெரிதும் உதவி புரிந்தவர்கள் செசன்ய கிருத்துவர்கள். செசன்னியர்களுடன் சேர்ந்து போரிலும் பங்கேற்றிருக்கிறார்கள். செசன்யாவில் மதக்கலவரம் ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செய்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்கவில்லை, அதற்கு காரணம் இவர்களது ஒற்றுமை.      

3. செசன்யா உருவானால், அது, ரஷ்யாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்பது இவர்களுடைய மூன்றாவது கருத்து. ரஷ்யா தங்களை பிரித்து விடுவதன் மூலம் அது தோல்வியடைந்ததாய் ஆகாது, அது ரஷ்யாவில் நிலையான அரசாங்கத்தை (Stability) உருவாக்க உதவும் என்பது செசன்னியர்களின் நிலை.  

சரி, இன்றைய சூழ்நிலைக்கு வருவோம், இனிமேலும் ரஷ்யா செசன்னியர்களுடன் போராடுவதை விரும்பவில்லை. இறைவன் நாடினாலன்றி அவர்களால் செசன்னியர்களை முழுமையாக வெற்றிக்கொள்ள முடியாது. நிலப்பகுதிகளில் வேண்டுமானால் அவர்கள் நினைத்ததை செய்யலாம், ஆனால் காகசஸ் மலைப்பகுதிகளிலோ அவர்களால் இன்று வரை வெற்றி பெறமுடியவில்லை. தற்போது அமைதி நிலவினாலும் எப்போது செசன்னியர்கள் மலைகளிலிருந்து படையோடு வருவார்கள் என்ற அச்சம் இருந்து கொண்டேதானிருக்கும் (ஏனென்றால் 1996 ஆம் ஆண்டு இப்படித்தான் நடந்தது). ரஷ்யா, இதையெல்லாம் நன்கு உணர்ந்தேயிருக்கிறது.

அதற்கு செசன்னியர்களை சமாதானப்படுத்துவது தான் ஒரே வழியென்று முயன்றுவருகிறது.

யார் தான் நினைத்திருப்பர், ரஷ்யா OIC இல் (Organisation of Islamic Conference) சேர விருப்பம் தெரிவிக்கும் என்று?

அதுமட்டுமல்லாமல், 2050-ஆம் ஆண்டு வாக்கில், ரஷ்யாவின் மக்கட்தொகையில் 50% முஸ்லிம்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோல இன்றைய ரஷ்யாவில் வயதானவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் செசன்யாவிலோ இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் (Chechnya Birth rate is 26.4 per 1000 individual while in Russia it was 11.28 per individual, 2007 Report).

ஆக ரஷ்யா தன் எதிர்காலத்தை இந்த இளைஞர்களை வைத்து தான் பார்க்கிறது.

ரஷ்யாவின் இந்த அணுகுமுறைக்கு செசன்னியர்களின் பதில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.           

நாம் மேலே பார்த்த்து போன்று, ரஷ்ய-செசன்ய பிரச்சனையின் முக்கிய சாராம்சம் இவைதான்.

என்று ரஷ்யா, செசன்யாவை முழுமையாக தன்னிடத்தில் இருந்து விலக அனுமதிக்கிறதோ அன்றுதான் இந்த பிரச்சனை முழுமையாய் முடியும்.

ஒருவேளை, ரஷ்யா எதிர்பார்ப்பதுபோல, செசன்னியர்கள் அவர்களுடன் சமாதானமாக போனாலும் அமைதி திரும்பலாம். ஆனால் செசன்னியர்கள் கடந்த காலத்தை மறப்பார்களா என்பதுதான் இப்போது ரஷ்யாவிற்கு இருக்கும் மாபெரும் சவால்....  

இறைவன் இந்த மக்களுக்கு அவர்கள் எதிர்ப்பார்க்கிற அமைதியையும், பாதுகாப்பையும் விரைவில் வழங்குவானாக...ஆமின்...

இறைவன் நம் எல்லோரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்..

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to:
1. Br.Roman Khalilov, Then Head of the political department of the chechen foreign ministry.
2. Br.Ferdouz Shabaz Adel, Then personal translator for Aslan Maskhadov.
3. NASA, for the satellite pic of Caucasas mountains.
4. BBC, for the War pictures taken from capital of Chechnya, Grozny.  
5. Global Crisis Website.

References:
1. The Constitution of the Russian Federation - constitutiondotru.
2. History of Chechen war - Ferdouz Shabaz Adel.
3. Independence and State of Chechnya - The Eurasian Politician, Issue 2.
4. A short Introduction to the Chechen problem - Alexandru Liono.
5. The Chechen Problem - Mark.S.Watson.
6. Time line of Key events in Chechnya - David Johnson and Borgna Brunner.
7. Chechnya - Lycos.
8. The Conflict between Russia and Chechnya - Conflict research Consortium.
9. Crisis in Chechnya - Anup Shah in Global Crisis.
10. Q&A: The Chechan Conflict - BBC dated 10th July 2006.
11. The rise and fall of Chechen independence Movement - David Storobin, Global Politician.
12. What does Russia see in Chechnya - Andrew Meier.
13. Council of Europe failing on Russia - Amnesty International and Human Rights watch.
14. Russian Muslims between Oil and Federalism - Elmira Akhmetova.
15. Caucasas, North Causasas, Chechnya - Wikipedia.
16. Meaning of Federation - Answersdotcom.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ     
            






5 comments:

  1. Assalamu alaikum,
    Dear Brother,
    ippadi aneha vishayangalai unmaiyaahath tharuvatharku allaah ungalukku narkooli vazhanguvaanaaha!!!
    anaivarum duaa seivom..
    Insha allaah ulagamengum irai aatchi malarum naal vehu tholaivil illai.
    samuthaaya makkal jananaayahaththai nambi iyakkth thalaivarhalidam emaaruvathilirunthu allaah paathuhaappaanaaha!!

    ReplyDelete
  2. சிறப்பான கட்டுரை..இன்னும் இதுபோன்ற நல்ல கட்டுரைகளை வெளியிட் முயற்சி செய்யவும்.இனியவன்.

    ReplyDelete
  3. Zayeem Anfaaz from Sri Lanka

    அஸ்ஸலாமு அல்லைக்கும்

    நான் ரஷ்யன் சம்மேளனத்தின் அனைத்து முஸ்லிம் பெர்ம்பன்மையான குடியரசுக்களும் தருகிறேன்

    1) செசென்யா குடியரசு - Chechen Republic
    2) கபார்டினோ-பல்கர் குடியரசு - Kabardino-Balkar Republic
    3) கராச்சாய்-சேர்கேசீய குடியரசு - Karachay-Cherkessia Republic
    4) அதிஜீயா குடியரசு - Republic of Adygea
    5) பஸ்கொர்டோஸ்தான் குடியரசு - Republic of Bashkortostan
    6) தகெஸ்தான் குடியரசு - Republic of Dagestan
    7) இங்குஷெதியா குடியரசு - Republic of Ingushetia
    8) ததரிஸ்தான் குடியரசு - Republic of Tatarstan

    நான் இவற்றை கஷ்டபட்டு தேடி எடுத்தேன்

    இப்படிக்கு உங்கள் இலங்கை சகோதரன்

    Zayeem Anfaaz

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  4. சகோதரர் Zayeem Anfaaz

    வ அலைக்கும் சலாம்...

    ஜசாக்கல்லாஹ் பிரதர்..

    ReplyDelete
  5. Very nice article i loved it im boasting abt it thank so much

    ReplyDelete